Wednesday, June 6, 2012

சிறுபான்மை உள் ஒதுக்கீட்டை உறுதிச்செய்ய வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!


கே.எம்.ஷெரீஃப்
புதுடெல்லி:27 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோருக்கான(ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தடைச்செய்துள்ள சூழலில், நடப்பு கல்வியாண்டில் உள் ஒதுக்கீட்டின் படி படிக்க அனுமதிப்பெற்றுள்ள சிறுபான்மை மாணவ-மாணவியருக்கு உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதிச்செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது:
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை  நடவடிக்கைகள் துவங்கியுள்ள நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. நடப்பு கல்வியாண்டு முதலே உள் ஒதுக்கீடு நடைமுறைக்கும் வரும் என்ற உத்தரவை கடந்த வாரம்தான் மனித வள மேம்பாட்டுத்துறை பிறப்பித்தது.
முஸ்லிம் சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை சுட்டிக்காட்டிய சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இடஒதுக்கீட்டிற்கு சிபாரிசுச் செய்தது மதத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக சமூக-பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலையை அடிப்படையாக கொண்டாகும்.
ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் 4-வது முறையாக இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு சிறுபான்மை மாணவர்களை பாதிக்காமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்த மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஒருவாரத்திற்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறுபான்மை மாணவர்களுக்கான 450 இடங்களும் நஷ்டமாகும். அரசு மற்றும் அதிகார வர்க்கத்தினரிடம் சிறுபான்மையினருக்கு எதிராக திரைமறைவில் சித்து விளையாட்டுக்களை ஆடுபவர்கள் இருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன என்று கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment