Sunday, March 25, 2018

கர்நாடகா: 15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்!

கர்நாடகா: 15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்!

கர்நாடகா:  15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்!''இந்தியா முழுதும் மூன்றரை கோடி முதல் நான்கு கோடி வரையிலான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் கர்நாடகாவில், ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசையும் ஏமாற்றி 15 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டப்பட்டதைப் பார்த்து கர்நாடக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்''
பெங்களூருவில் கடந்தவாரம் நடந்த தேர்தல் முறைகேடு தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலரும், கல்வியாளரும், இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக்கின் தலைவருமான தாவூத் மியாகான் இந்த அதிர்ச்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

இந்தத் தகவல் எப்படி வெளியானது?
‘’அண்மையில் டெல்லியில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஓர் கூட்டம் நடந்தது. அதில் பல மாநிலங்களிலும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பலர் நீக்கப்படுவது தொடர்பாக ஆழமான கவலையுடன் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விவாதித்து முடித்து விட்டுவிடவில்லை. சச்சார் கமிட்டிக்காக புள்ளி விவரங்களை தயாரித்த குழுவினரிடம் இதை சரிபார்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைப் பட்டியலையும், அண்மையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலையும் வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. மக்கள் தொகை பட்டியலில் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கலாம். அதில் இருந்துவிட்டு இதில் இல்லையென்றால் ஒன்று இறந்திருக்க வேண்டும், அல்லது இடம் பெயர்ந்திருக்க வேண்டும். இந்த விடுபட்ட வாக்காளர்களை பட்டியலாக தயாரித்தார்கள். ஆக இரண்டு அரசு ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த விடுபட்ட வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த விடுபட்ட வாக்காளர்கள் பட்டியல் தனித்தனி குழுக்களிடம் கள ஆய்வுக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இந்த விடுபட்ட வாக்காளர் பட்டியல் ஆய்வு கர்நாடகாவில் முன்னுரிமை கொடுத்து நடத்தப்பட்டிருக்கிறது. அங்கே தேர்தல் வர இருப்பதால் இந்த முன்னுரிமை.
கர்நாடகாவில் குழுக்களிடம் கொடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதில் கர்நாடகத்தில் விடுபட்ட வாக்காளர்கள் 18 லட்சம் பேர் என்று தெரியவந்தது. இதை களப் பணியாளர்கள் ஆய்வு செய்தபோது இறந்தவர்கள் அல்லது இடம் பெயர்ந்தோர் சுமார் மூன்றரை லட்சம் பேர்தான் என்பது தெரியவந்திருக்கிறது. கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 15 லட்சம் பேரும் முஸ்லிம்கள் அல்லது பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் என்பதுதான் இங்கே அதிர்ச்சி தரவைக்கும் செய்தி.
இந்த ஆய்வுக்கான அடிப்படை எங்கிருந்து தொடங்கியது?
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமூக ஆய்வுகள் மேற்கொண்டு வரும் யோகேந்திர யாதவ்தான் இந்த பொறியை முதலில் உணர்ந்திருக்கிறார். அவர் தனக்குக் கிடைத்த தகவலின்படி உ.பி, டெல்லி உட்பட பல மாநிலங்களில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருப்பதை உறுதி செய்துகொண்டார். அதன் பின்னர் ஹர்ஷ் மேந்தர் முன்னாள் ஐ.ஏ.எஸ்,( குஜராத் கலவரத்தைப் பார்த்து தனது பணியைத் துறந்தவர். இந்தியா முழுவதும் இப்போது சமூக மேம்பாட்டுப் பணியை செய்து வருகிறார்) மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் இதை ஆய்வு செய்து அதன் பின் சச்சார் கமிட்டிக்கான புள்ளிவிவரங்கள் தயாரித்த குழுவிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டு இப்போது இந்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
இத்தனை பெரிய மோசடி மத்திய மாநில தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் முடியுமா? குறிப்பாக கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ்தானே இருக்கிறது?
வாக்காளர் பட்டியலில் நீக்கம், சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றை செய்ய மாநிலத் தேர்தல் ஆணையத்தால்தான் முடியும். கடந்த வாரம் பெங்களுருவில் தேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பது எப்படி என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கலந்துகொண்டார். கர்நாடகத்தின் மூத்த அமைச்சர் ரோஷன் பேக், அம்மாநில சிறுபான்மை ஆணையத்தின் நிர்வாகிகள், மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நானும் கலந்துகொண்டேன்.

சச்சார் கமிட்டி அறிக்கையையும், பரிந்துரையையும் அளித்த குழுவைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அளித்த அறிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கர்நாடக மாநிலத்தில் ஏறக்குறைய 15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான விவரத்தை அவர்கள் கணிணி ஆதாரங்களுடன் அளித்தனர். அவ்வாறே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்கும் இதர வாக்காளர்களிலும் கணிசமானவர் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அறிய முடிந்தது.
குறிப்பாக பெங்களூருவின் மையத்தில் இருக்கும் சிவாஜி நகர் தொகுதியில் 8,800 முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதை அறிந்து அமைச்சர் ரோஷன் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவர்தான் அந்தத் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ. ’நாங்கதானே இங்க ஆளுங்கட்சி, எங்களை மீறி எப்படி நடந்திருக்கும்? இது தவறான தகவல்’ என்றார். அவரது தொகுதியில் ஆய்வு செய்யச் சொன்னோம். மீட்டிங் ஹாலில் இருந்தபடியே தனது தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விடுபட்ட வாக்காளர் பட்டியலை அனுப்பி அது சரியா என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அடுத்த நாள் மாலை அமைச்சர் ரோஷன் ஆய்வின் முடிவில், குழு கொடுத்தபடியே 8, 800 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதையும் அவர்களில் சுமார் 500 முதல் 800 பேர் வரையிலுமே நிஜமான இறப்பு, இடப்பெயர்ச்சி காரணமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற 8 ஆயிரம் பேரும் திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதிர்ச்சி தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் தலைநகரில் காங்கிரஸ் அமைச்சரின் தொகுதியிலேயே இவ்வளவு நீக்கம் நடந்திருக்கிறது என்றால் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் கர்நாடக காங்கிரஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
இப்போது அவசர அவசரமாக 20 ஆயிரம் பேரை ஈடுபடுத்தி திட்டமிட்டு நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க ஆரம்பித்துள்ளார்கள். இன்னும் சில நாட்கள்தான் உள்ளன. அவர்களால் அவசரமாக செயல்பட முடிந்தாலும் 15 லட்சம் பேரில் சுமார் மூன்றரை லட்சம் பேர் வரைதான் சேர்க்க முடியும்.
தமிழகமும் உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இந்தியா முழுதும் முஸ்லிம் வாக்காளர்கள் 4 கோடி வரை குறைந்திருப்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த தேர்தலில் நிஜமான ஜனநாயக முடிவுகள் கிடைக்கும்’’ என்று எச்சரித்தார் தாவூத் மியாகான்.
அதிர்ச்சி தரத் தக்க அபாயமான எச்சரிக்கை.

Sunday, February 18, 2018

‘நான் ஆளுநராக இருந்தாலும், இந்த அரசை நான்தான் ஆட்சி செய்வேன். நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’’

கவர்னர் பன்ரிவால் புரோஹித், வாரத்தில் ஒரு நாள் டின்னருக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்தில், தமிழகத்தின் முக்கிய மீடியா அதிபர்களைச் சந்தித்து வருகிறார். வரும் பத்திரிகை அதிபர்களிடம், ‘‘நான் ஆளுநராக இருந்தாலும், இந்த அரசை நான்தான் ஆட்சி செய்வேன். நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார். இதைக் கேட்டு பத்திரிகை அதிபர்கள் அதிர்ந்துபோகிறார்கள்.

மோடி உரையை மாணவர்கள் கேட்க வேண்டும்!' - கட்டாயப்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை

ள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள சுற்றறிக்கை ஒன்று பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ' தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பேசும் உரையை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்கள் மத்தியில் மோடியை விளம்பரப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கக் கூடாது' எனக் கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த வாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், ' பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குச் சென்று சேரக் கூடிய வகையில் பாடத்திட்டத்தில் மோடியைப் பற்றி விவரங்கள் இடம் பெற வேண்டும்' என தமிழிசை அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ' அதாவது, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாணவர்கள் வாக்கு செலுத்தும் வயதுக்கு வந்துவிடுவார்கள். அதையொட்டியே மாணவர்கள் மத்தியில் மோடியை பிரபலப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது' என நம்மிடம் விவரித்தனர் பா.ஜ.க நிர்வாகிகள். மத்திய அரசின் இந்த யோசனையை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார் எனவும் தெரிவித்தனர். இதன் நீட்சியாகவே, ' பிரதமரின் உரையை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும்' என்ற சுற்றறிக்கையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது.
மோடி உரை-பள்ளிக் கல்வி சுற்றறிக்கை
' மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள் என்ற தலைப்பில் கடந்த 13.2.18 அன்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன். அந்த அறிக்கையில், ' மாண்புமிகு பாரத பிரதமர் டிவி/ரேடியோ/வலைதளம்/ யூ ட்யூப் மூலம் மாணவர்களுக்கு 16.2.2018 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரையில் உரையாற்ற உள்ளார். பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, இந்நிகழ்வை மாணவர்கள் கண்டு கேட்ட செய்யப்பட்டுள்ள போதுமான முன்னேற்பாடு பற்றிய உறுதி அறிக்கையினை 14.2.2018 அன்று மாலை 4 மணிக்குள்ளும் மற்றும் கண்டு கேட்டபின், பின்தொடர் அறிக்கையினை 16.2.2018 அன்று மதியம் 1 மணிக்குள்ளும் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கீழ்காணும் படிவம் 2-ஐ 16.2.2018 அன்று நண்பகல் 12 மணிக்குள் பூர்த்தி செய்தும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன், ம.தி.மு.க.பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு குறித்து, நம்மிடம் பேசிய ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், " பள்ளிக் கல்வித்துறையின் இந்தச் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. ' பிரதமரின் உரையை மாணவர்கள் கட்டாயமாகக் கேட்க வேண்டும்' என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ' ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மாணவர்கள் பார்ப்பதைப் பதிவு செய்து அனுப்ப வேண்டும்' எனக் கூறியுள்ளனர். பிரதமர் மோடியை மாணவர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை பள்ளிக் கல்வித்துறை செய்கிறது. இது முற்றிலும் விளம்பர நிகழ்ச்சி. மாணவர்கள் மத்தியில் மோடியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. பா.ஜ.க அரசின் கொள்கைளைக் கொண்டு சேர்க்கும் மறைமுக முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம். இதனை தமிழக அரசு அனுமதித்திருக்கக் கூடாது. ஒருவர் பேசுவதை விருப்பத்தோடு பார்ப்பது என்பது வேறு. இதனைப் பதிவு செய்து பள்ளிக் கல்வித்துறை செயலர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளனர். முந்தைய காலகட்டங்களில் இப்படியெல்லாம் நடந்தது கிடையாது. பள்ளிக் கல்வித்துறையின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்" என்றார் கொதிப்போடு.
இதுகுறித்து, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் இயக்குநர் ராமேஸ்வர முருகனிடம் பேசினோம். " இவ்வாறு செய்யுமாறு இந்தியா முழுக்கவே உத்தரவிட்டுள்ளார். மீண்டும் உங்களிடம் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டோம். " அமைச்சர் நிகழ்ச்சியில் இருக்கிறார்" எனப் பேசிய அவருடைய உதவியாளர் கதிர், " பிரதமர் உரையைக் கேட்பதில் என்ன தவறு என்று தெரியவில்லை? அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள இப்படியொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது திணிப்பு முயற்சி அல்ல. அவர் நாட்டின் பிரதமர். மாணவர்களுக்கு அவர் ஏதோ சொல்ல வருகிறார். இதை எடுத்துக் கொள்கிறவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத்தான் இருக்கும். அரசியல் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. இதை ஏன் நல்ல விஷயமாகப் பார்க்கக் கூடாது? அவர் சொல்வதை எல்லாம் நாம் எதிர்மறையாகத்தானே யோசிக்கிறோம்? அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அவர் பேசுகிறார். நல்ல அறிவுரையை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்" என்றார் உறுதியாக. 

Sunday, February 4, 2018

விஞ்ஞானி ஹெர்ஷலின் தவறை, சுட்டிக் காட்டிய குர்ஆன்

வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி விண்வெளியை ஆராய்ந்து பல உண்மைகளை கண்டு பிடித்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இவருக்கு முன்னால் 1609ல் விஞ்ஞானி கலீலியோ பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் அந்த அளவு விண்வெளித்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் அந்த காலத்தில் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாததே காரணம். நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பெருவெளி என்ற வரையில்தான் கலீலியோவால் கண்டு பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் முனனேற முடியவில்லை.

விஞ்ஞானி ஹெர்ஷல் 1783 வாக்கில் தொலைநோக்கியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி குறிப்பிடப்படும்படியான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.