Friday, June 8, 2012

ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச்செய்ய இஸ்ரேலுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை!


Amnesty calls on Israel to end 'administrative detention' of Palestinians
லண்டன்:விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து ஃபலஸ்தீன் பிரஜைகளை உடனடியாக விடுதலைச் செய்யவோ அல்லது நீதியான விசாரணயை உறுதிச்செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ள இஸ்ரேல் அரசுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.
‘இஸ்ரேல் சிறைகளில் நீதிக்காக போராடும் ஃபலஸ்தீன் குடிமக்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆம்னஸ்டி, சிறைக்கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைச்செய்ய தயாரில்லை என்றால் சர்வதேச நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீதியான விசாரணை நடத்தவேண்டும் என்று ஆம்னஸ்டியின் அறிக்கை இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுக்கிறது.
அட்மினிஸ்ட்ரேடிவ் டிடென்சன்(அரசு நிர்வாக காவல்) என்ற செல்லப்பெயரால் அறியப்படும் சட்டம் மூலமாக எந்த ஒரு நபரையும் காலவரையற்று சிறையில் அடைக்க இயலும். இத்தகைய சிறைக்கைதிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை அறிக்கையில் ஆம்னஸ்டி சுட்டிக்காட்டியுள்ளது.
சிறைக்கைதிகளுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறு பல வருடங்களாக இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறோம் என்று அறிக்கையை வெளியிட்ட ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் மேற்காசியா விவகார தலைவர் ஆன் ஹாரிசன் தெரிவித்துள்ளார். சிறைக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறையில் சென்று சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என்றும் அவர்களின் தனிமைச் சிறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் ஆம்னஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறையில் சித்திரவதைகள், அசெளகரியங்கள் ஆகியவற்றை கண்டித்து 1500க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் கைதிகள் இஸ்ரேலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கடந்த மாதம் இஸ்ரேல் உறுதி அளித்தது. ஆனால், இதுவரை இவ்விவகாரத்தில் இஸ்ரேல், தாம்  அளித்த வாக்குறுதியை பேண தயாராகவில்லை.

No comments:

Post a Comment