Friday, June 8, 2012

இந்திய தலைநகரின் அலங்கோலம்: 1600 மாணவர்கள் உள்ள பள்ளியில் ஆசிரியர் இல்லை, 3 பள்ளிகளில் ஆசிரியர் இருந்தும் மாணவர்கள் இல்லை!


CAG paints dismal picture of govt schools in national capital
புதுடெல்லி:இந்திய திருநாட்டின் தலைநகராம் டெல்லியில் 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை உள்ளது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் மூன்று பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் மிக மோசமாக இருப்பதாகவும், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பிரபலமான திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்றும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லை நகரில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பாதிக்கும் மேலானவற்றில் வகுப்பறை போதிய எண்ணிக்கையில் இல்லை என்றும், கட்டுமானப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகின்றன என்றும் துறை ரீதியான உள் ஆய்வு மிகவும் மெத்தனமாக காலதாமதமாக நடைபெறுவதால் பணிகள் உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2008-09-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு செய்த சிஏஜி, ஒரு ஆசிரியருக்கு 276 மாணவர்கள் என்ற விகிதம் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் கல்வியை கட்டாயமாக்கும் சட்டத்தின்படி ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதாசாரம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அளித்துள்ள தகவலின்படி 3 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்குவதாகவும், ஒரு பள்ளியில் 1,676 மாணவர்கள் இருந்தபோதிலும் ஆசிரியர்கள் இல்லை என்றும், 3 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் 106 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் செய்துதரப்படவில்லை. மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 143 பள்ளிகளில் 61 பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் வகுப்பறைகளே இல்லை என்றும், 33 பள்ளிகளில் மைதானங்களே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கை தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி உணவுத் துறை செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்ட சிஏஜி, உரிய பயனாளிகளைக் கண்டறிய துறை தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்துக்கு 1.57 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டாலும், 56,000 குடும்பங்களே பயனடைந்துள்ளன. ரேஷன் அட்டை விநியோகத்திலும் 332 நாள்கள் வரை தாமதம் ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 1,36,436 அட்டைகள் தயார்படுத்தப்பட்டபோதிலும் 54,378 அட்டைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன. விநியோகிக்கப்படாத அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் அரிசி ஆகியவை விநியோகிக்கப்பட்டதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment