Thursday, May 17, 2012

இஸ்ரேல் அமைச்சரின் இந்தியா சுற்றுப்பயணத்திற்கு தடை விதித்த பாதுகாப்பு அமைச்சகம்!


Ehud Barak during a 2006 visit to India
புதுடெல்லி:ஏப்ரல் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்கின் இந்திய சுற்றுப்பயணம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் எதிர்ப்பு மூலம் நடைபெறவில்லை.
பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மாதம் ‘டிஃபெக்ஸ்போ’ என்ற பெயரில் டெல்லியில் ஏற்பாடுச்செய்த பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறும் வேளையில் இஸ்ரேல் அமைச்சரின் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு வர தயாராக இருந்தனர்.
தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி சர்ச்சை, தரைப்படையின் ஒரு பிரிவு டெல்லியை நோக்கி ரகசியமாக முன்னேறியது தொடர்பான செய்தி உள்நாட்டில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம் ஆகிய காரணங்களால் பாதுகாப்பு அமைச்சகம் பாரக்கின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இச்சூழலில் இஸ்ரேல் அமைச்சர் தலைமையிலான குழுவினரை இந்தியாவுக்கு அழைப்பது புதிய சர்ச்சைக்கு வழி வகுக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் கருதியது.
குறைந்த கால அளவிலேயே இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக மாறியுள்ள இஸ்ரேல், இச்சுற்றுப்பயணத்தின் மூலம் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.
டிஃபெக்ஸ்போவில்(பாதுகாப்புத்துறை கண்காட்சி) கூடுதல் இடம் இஸ்ரேலின் 20 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல பாதுகாப்பு ஆய்வு வளர்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கூட்டாளியாக கண்காட்சியில் இஸ்ரேல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகையதொரு சூழலில் இஸ்ரேலின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு வருவது மிகச்சிறந்த வாய்ப்பை உருவாக்கும் என இஸ்ரேல் கருதியது.
முன்னர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளும், ஊழலும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு கறுப்புப் பட்டியலில் சேர்த்த இஸ்ரேல் அரசின் ஆயுத தயாரிப்பு நிறுவனமான இஸ்ரேல் மிலிட்டரி இண்டஸ்ட்ரீ(ஐ.எம்.ஐ) -ஐ கூடுதலான நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியும் இச்சுற்றுப்பயணத்தின் மூலம் நடத்தலாம் என இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு இச்சுற்றுப்பயணத்தில் விருப்பம் இல்லை.
1745 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததைத் தொடர்ந்து இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபடுவது தடைச் செய்யப்பட்டுள்ள ஐ.எம்.ஐ கட்டிய 224 கோடி ரூபாயின் வங்கி உத்தரவாத ஆவணத்தை(bank guarantee)  கடந்த மாதம் மத்திய அரசு பறிமுதல் செய்தது. இந்நடவடிக்கையை எதிர்த்து ஐ.எம்.ஐ டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.

No comments:

Post a Comment