
டெஹ்ரான்:ஈரானில் நடத்திய பரிசோதனைகளில் முன்னர் இல்லாத அளவுக்கு யுரேனியம் செறிவூட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்ததாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கையை பொருட்படுத்த தேவையில்லை என்றும், அது தொழில்நுட்ப ரீதியான பிரச்சனை என்றும் ஈரான் கூறியுள்ளது.
சர்வதேச அணுசக்தி ஏஜன்சியில் ஈரானின் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானியை மேற்கோள்காட்டி ஈரானின் செய்தி நிறுவனமான இர்னா இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானில் கூமிற்கு அடுத்துள்ள மலைப்பகுதியில் நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையத்தில் 27 சதவீதத்திற்கும் அதிகமாக யுரேனியம் செறிவூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், முன்னர் 20 சதவீதத்திற்கும் அதிகமான யுரேனியம் செறிவூட்டல் ஈரானில் நடப்பதை கண்டுபிடிக்க சர்வதேச அணுசக்தி ஏஜன்சியால் இயலவில்லை.
வெறும் ஒரு தொழில்நுட்ப ரீதியான பிரச்சனையை பெரிதுப்படுத்தி அரசியல் மயமாக்கும் போக்கு சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவை தகர்ப்பதற்கான முயற்சியாகும் என சுல்தானி குற்றம் சாட்டுகிறார்.
இதனிடையே, மேலும் 2 அணுசக்தி நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஈரானின் அணுசக்தி துறை தலைவர் ஃபரீதூன் அப்பாஸி கூறியுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்ய உதவியுடன் அணுசக்தி நிலையத்தின் செயல்பாட்டை ஈரான் துவக்கியது.
புதியதாக துவக்கவிருக்கும் அணுசக்தி நிலையங்கள் 1 அல்லது 2 வருடங்களில் இயங்க துவங்கும் என அப்பாஸி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment