Monday, January 20, 2014

சிறுபான்மையினரை அவமதித்துப் பேசிய பாஜக துணைத் தலைவர் எச். ராஜா மீது SDPI கட்சி புகார்!


SDPIசென்னை: மதவெறி, இனவெறியைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க. மாநில நிர்வாகி எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘இந்து தர்மப் பாதுகாப்பு’ என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா,
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துத்துவவாதிகளுக்கு எதிராக உள்ளவர்கள் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துகளையும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும், மதவெறியைத் தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார்.
அவரது பேச்சு யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது: (<http://www.youtube.com/watch?v=7rO7qPp0ps4>, <http://www.youtube.com/watch?v=jV9qVLRVMEY>, <http://www.youtube.com/watch?v=hxH0Ra-ap2Q>)
இதனை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டுள்ளனர். அவர் தனது உரையில் இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் என்றும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தமிழர்கள் இல்லை என்றும் கூறுகிறார். தந்தை பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், தலித் பெண்கள் மேலாடை அணிவதால்தான் துணி விலை உயர்ந்ததாக தந்தை பெரியார் கூறியதாகவும் அவதூறாக பேசியுள்ளார்.
சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது போல் இந்துக் கடவுள்களைப் பற்றிப் பேசிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், அவரைக் கொல்ல வேண்டும் என்றும் அவர் அப்பாவி மக்களைத் தூண்டி விடுகிறார் என்றும் பேசியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் கடவுளாக வணங்கி வரும் மேரி எப்படி கணவன் இல்லாமல் குழந்தை பெற்றார் எனக் கேலி செய்துள்ளார். மேலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார்களைப் பற்றிய பட்டியல் தங்களிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னையே காப்பாற்ற முடியாத ஏசு எப்படி உங்களைக் காப்பாற்றுவார் என்றும் கிறிஸ்தவர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
நபிகள் நாயகம் பற்றி அவதூறாக வெளிவந்துள்ள சில புத்தகங்களைப் படித்து அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பொது அமைதியைக் கெடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். பாபரி மஸ்ஜிதை இடித்தது நாங்கள்தான் என்றும், வரும் மே மாதத்திற்குப் பிறகு அங்கு ராமர் கோவில் எழுப்பப்படும் என்றும் பேசியுள்ளார்.
அவருடைய இந்தப் பேச்சுகள் இணையதளத்தில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எச். ராஜாவின் பேச்சு மத உணர்வுகளைப் புண்படுத்துவதுடன், அமைதியாக வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
எனவே அவரைக் கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment