Thursday, June 27, 2013

மரணத்தண்டனைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணா!

புதுடெல்லி:மரணத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி சித்தரவதைக்கு ஆளானோருக்கு சர்வதேச ஆதரவு தினத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியா தர்ணா போராட்டம் நடத்தியது. தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான் பேசுகையில்,’பல வளர்ச்சியடைந்த நாடுகளும் மரணத்தண்டனையை ரத்துச் செய்துள்ளன. இந்தியாவில் மரணத் தண்டனையின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.ஆதாரங்கள் இல்லாதபோதும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அப்ஸல் குருவுக்கு மரணத் தண்டனை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
ஒருபுறம் அரசுகள் தங்களது குடிமக்களுக்கு மரணத் தண்டனை விதிக்கும்போது, மறுபுறம் சிறைகளிலும், காவல் நிலையங்களிலும் சாதாரணமக்கள் கொல்லப்படுகின்றார்கள். மரணத் தண்டனைக்கு எதிராக போராடும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவளிக்கும்’ என்று தெரிவித்தார்.
உருது நாளிதழான ’கவ்மி ஸலாமத்தே’யின் தலைமை எடிட்டரான செய்யத் முஹம்மது அஹ்மது காஸ்மி தனது உரையில் கூறியது:பொய்யான ஆதாரங்களை உருவாக்கி அரசு,முஸ்லிம்கள் உள்ளிட்ட குடிமக்களை சிறையில் அடைத்து மனித உரிமை மீறல்களை நடத்துகின்றது. இத்தகையதொரு பொய் வழக்கைதான் இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் என் மீதும் சுமத்தப்பட்டது.சிறைகளில் பல்வேறு வகையான சித்திரவதைகளை கைதிகள் அனுபவிக்கின்றனர்.இத்தகைய சித்திரவதைகள்,மரணத்தண்டனைக்கு எதிராக எதிர்ப்பு தீவிரமடையவேண்டும் என்று கூறினார்.
என்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப், பாப்புலர் ஃப்ரண்ட் டெல்லி மாநில தலைவர் அன்சாருல் ஹக், கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய தலைவர் அப்துல் நாஸர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment