Sunday, May 13, 2012

குஜராத் இனப்படுகொலைக்கு வழிவகுத்த பந்திற்கு அனுமதி வழங்கியது தவறு: எஸ்.ஐ.டி!


Gujarat govt wrong to allow VHP bandh- SIT
புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்து மறு தினம் விசுவஹிந்து பரிஷத்தின் தலைமையில் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு முழு அடைப்பு(பந்த்) நடத்த அனுமதி வழங்கிய குஜராத் அரசின் நடவடிக்கை முற்றிலும் தவறு என்று இனப்படுகொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) தனது அறிக்கையில் கூறியுள்ளது.
அதேவேளையில் பந்திற்கு அனுமதி வழங்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் எஸ்.ஐ.டி சிபாரிசு செய்யவில்லை என்பது கேலிக்கூத்தாகும்.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இந்த முழு அடைப்பின் போதுதான் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமான கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி தீப்பற்றி எரிந்ததில் 58 கரசேவகர்கள் தீயில் கருகி இறந்தனர். இதனை கண்டித்து 2002 பிப்ரவரி 28-ஆம் தேதி குஜராத் முழுவதும் வி.ஹெச்.பியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தன. அப்பொழுது நிலவிய வன்முறை சூழலை கவனத்தில் கொள்ளாமல் முழு அடைப்பிற்கு அரசு அனுமதி வழங்கியது.
இனப்படுகொலையை தடுக்க மோடி அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி பி.ஸ்ரீகுமாரின் கருத்தை எஸ்.ஐ.டி ஒப்புக்கொள்கிறது. முழு அடைப்பு சட்டவிரோதம் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பு நாடு முழுவதும் பொருந்தும் வேளையில் அதற்கு மாறாக அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பை தடுக்க மோடி அரசு முயலவில்லை.
ஆனால், இச்செயல் முஸ்லிம் இனப்படுகொலையின் பின்னணியில் நடந்த சதித்திட்டத்தில் மோடி அரசை பங்கு சேர்க்க போதிய காரணம் இல்லை என்று எஸ்.ஐ.டியின் பித்தலாட்ட அறிக்கை கூறுகிறது. எதிர்ப்பு தெரிவிப்பதற்கான மக்களின் அடிப்படை உரிமையை மதித்து முழு அடைப்பை தடுக்காமல் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தது என்று மோடி அரசு விளக்கம் அளிக்கிறது.a

No comments:

Post a Comment