Monday, January 28, 2013

விஸ்வரூபத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: நீதிபதி, மத்திய அரசுக்கு தந்திகள் அனுப்பும் இஸ்லாமிய அமைப்பினர

சென்னை: 'விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் மோசமான சினிமா. இதைப் புரிந்து கொண்டு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இதனை விலக்கிக் கொள்ள உத்தரவிடக்கூடாது,' என்று கோரி உயர்நீதிமன்றம் மற்றும் மத்திய அரசுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தந்திகள் அனுப்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கமல் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஸ்வரூபம் படத்துக்கு ஒரு பக்கம் ஆதரவு குவிவதைப் போலவே, இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான பிற அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்களில் ஒரு பிரிவினர் விஸ்வரூபத்துக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். "100 கோடி போட்டு படமெடுத்துவிட்டார் என்பதற்காக கமல்ஹாஸனின் விஸ்வரூபத்தை அனுமதிக்கக் கோருவதும், 13000 கோடி செலவழிக்கப்பட்டுவிட்டதற்காக கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கோருவதும் ஒன்றுதான்," என்று கருத்துத் தெரிவித்துள்ளார் இதழியலாளரும் எழுத்தாளருமான கவின்மலர். "இந்த படம் வெளியாக வேண்டும். தமிழ் மக்கள் அதை பார்த்து கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கமல்ஹாசன் உட்பட இந்த படத்தின் மூளையாக செயல்பட்ட அத்துணை பேரையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும். ஒருவேளை இது வெளிவந்து சீந்துவார் இல்லாமல் போனால் அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது", என்ற விமர்சனங்களும் (தேவ் ஆனந்த்) தீவிரமாகியுள்ளன. இந்த சூழலில், படத்துக்கு ஆதரவான தீர்ப்பை அளித்து சமூக அமைதி சீர்குலைய காரணமாக இருக்கக் கூடாது என்று நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமான தந்திகளை நேற்றுமுதல் அனுப்பி வருகின்றனர். "விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் மோசமான சினிமா. இதைப் புரிந்து கொண்டு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இதனை விலக்கிக் கொள்ள உத்தரவிடக்கூடாது," என்று அந்தத் தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, நாங்களும் தந்தி அனுப்புகிறோம் என்று தயாராகி வருகின்றனர் கமல் ஆதரவாளர்கள். இன்னொரு பக்கம், இன்று விஸ்வரூபத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வருமானால், போராட்டம் நடத்தவும், மேல்முறையீடு செய்யவும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள்.

No comments:

Post a Comment