Monday, January 7, 2013

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஈரான் உதவிகரம்!


Iran's aid to Rohingya Muslims reaches Myanmar
டெஹ்ரான்:மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவிபுரியும் நோக்கில் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் மியான்மர் சென்றடைந்துள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து உலக அமைப்புகள் (துருக்கியை தவிர) மெளனம் சாதிக்கும் வேளையில் ஈரான் உதவி கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவு, போர்வை உள்ளிட்ட 30 டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஈரான் ரெட் க்ரஸண்ட் சொசைட்டியின் துயர் துடைப்பு அமைப்பின் தலைவர் மஹ்மூத் முஸாஃபர் தெரிவித்தார். மியான்மருக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணிக்கு தலைமை வகிக்க போவதாகவும், அப்பகுதியில் முஸ்லிம்களின் நிலைமைக் குறித்து மதிப்பீடுச் செய்யப்படும் என்றும் முஸாஃபர் தெரிவித்தார்.
மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் துயர் துடைப்பு முகாம்களை நிறுவுவது குறித்து ஈரான் குழு ஆராயும். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படும் என்று முஸாஃபர் தெரிவித்துள்ளார். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு குடியுரிமை வழங்காமல் இருந்து வருகிறது. மேலும் மியான்மர் அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்தி வருகிறது. போலீஸ் ஆதரவுடன் முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடக்கின்றன. அண்மையில் நடந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பிறந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
முன்னர் துருக்கி பிரதமர் எர்துகானின் மனைவியும், வெளியுறவுத்துறை அமைச்சரும் நிவாரணப்பொருட்களுடன் சென்று மியான்மர் முஸ்லிம்களுக்கு உதவி அளித்தனர்.

No comments:

Post a Comment