Sunday, January 13, 2013

மலேகான்:சாட்சியை கொலைச் செய்ததாக ஹிந்துத்துவா தீவிரவாதி!


Malegaon blast
புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் குண்டை வைத்த டான்சிங்கை அடையாளம் கண்ட இளைஞரை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கொலைச் செய்துள்ளனர். என்.ஐ.ஏவின் காவலில் இருக்கும் டான்சிங், நேற்று முன் தினம் தன்னை அடையாளம் கண்ட இளைஞரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
இக்கொலையில் நேரடியாக தொடர்பு இல்லை. ஆனால், சதித்திட்டத்தில் பங்குண்டு என்பதை டான்சிங் ஒப்புக்கொண்டுள்ளான்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து 2 வாரங்கள் கழித்து செப்டம்பர் 26-ஆம் தேதி மலேகானில் வீட்டின் பின் பகுதியில் இறந்து கிடந்த அஸ்ஹர் பர்வேஸ் என்ற இளைஞனின் மரணம் கொலை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 38 வயது பர்வேஸ், மனக்கவலையால் தற்கொலைச் செய்தார் என்று போலீஸ் இவ்வழக்கை மூடிவிட்டது.
இரண்டு கைகள் பிளக்கப்பட்ட நிலையிலும், இடது கணுக்காலில் ஆழமான காயம் பட்ட நிலையிலும் பர்வேஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறியதால் மரணம் சம்பவித்ததாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கை கூறியது. இறந்த உடலில் காயங்களும், அடி பட்டதன் அடையாளங்களும் இருந்த போதும் போலீஸ் வழக்கை அவசர அவசரமாக தற்கொலை என்று மூடிவிட்டது. புதிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க என்.ஐ.ஏ பரிசீலிக்கிறது.
2006 செப்டம்பர் எட்டாம் தேதி 31 பேர் பலியான மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அன்று,வெடிக்குண்டு பொருத்திய சைக்கிளுடன் வந்த டான்சிங்கை, சைக்கிளின் பின் சீட் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதை கண்டு ஆச்சரியமுற்ற பர்வேஸ் தடுத்து நிறுத்தி, இதனை எங்கு வாங்கினீர்கள்? இந்த சீட்டை என் மகனின் சைக்களில் இணைக்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், பதில் எதுவும் கூறாமல் டான்சிங் சென்றுவிட்டான்.
குண்டுவெடித்த பிறகு பர்வேஸ் கண்ட சைக்கிளில் பொருத்திய குண்டுதான் வெடித்தது என்ற செய்தி வெளியானது. இதனை டி.வியில் கண்ட பர்வேஸ், குண்டுவைத்த நபரை தான் அடையாளம் கண்டுகொண்டதாக மலேகானில் ஜமாஅத்தே உலமாவின் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்டவர்களிடம் தெரிவித்தார் என்று பர்வேஸின் சகோதரர் மஸ்ஹர் கூறுகிறார். ஆனால், பர்வேஸின் கூற்றை நம்பாததுடன், இக்காரியத்தை போலீஸில் கூறவேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment