Sunday, May 20, 2012

வளைகுடா இந்தியர்களிடம் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை!


Gulf Indian workers
புதுடெல்லி:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அவசர உதவி விநியோகத்தில் மத்திய அரசு வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.
ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு கூடுதல் தொகை அளிக்கப்படும் வேளையில் வளைகுடாவின் பணிபுரியும் இந்தியர்களுக்கு துச்சமான உதவித் தொகையே அளிக்கப்படுகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சர் வயலார் ரவி, நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்த உதவி தொகை விநியோக(இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபெயர் ஃபண்ட்) புள்ளிவிபரம் மூலம் இந்த உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.
21.7 கோடி ரூபாய் அவசர உதவி தொகையாக பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் செலவழித்துள்ளன. செலவின் சராசரியை கணக்கிட்டால் இதர நாடுகளுக்கு அளித்து வரும் உதவித்தொகையை விட மிக குறைவான உதவித்தொகையே வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு 6,09,930 ரூபாயும், பிரான்சில் ஒருவருக்கு 1,85,162 ரூபாயும், சீனாவில் ஒருவருக்கு 1,37, 411 ரூபாயும் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் விநியோகம் செய்த உதவித்தொகையும் சராசரியாக ஒருவருக்கு ஒருலட்சம் ரூபாய்க்கு அதிகமாகும். பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஒருவருக்கு ரூ.60 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
அதேவேளையில் வளைகுடா நாடுகளில் விநியோகம் செய்த தொகை மேற்கண்ட நாடுகளில் விநியோகிக்கப்பட்ட தொகைக்கு பத்தில் ஒரு மடங்கை விட குறைவாகும். சராசரியாக ஒருவருக்கு கிடைத்த உதவித்தொகை பஹ்ரைனில் 4880 ரூபாயும், ஒமானில் 4463 ரூபாயும், குவைத்தில் 7916 ரூபாயும், சவூதி அரேபியாவில் 14,736 ரூபாயும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 19862 ரூபாயும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபெயர் ஃபண்ட் என்பது வேலைப் பிரச்சனைகளில் சிக்கியவர்களுக்கு சட்ட உதவி,  தாயகம் திரும்புவதற்கான செலவு, மரணித்தவர்களின் உடலை தாயகம் கொண்டுவருவதற்கான செலவு உள்ளிட்ட காரியங்களுக்காக செலவழிக்கப்படும் நிதியாகும்.

No comments:

Post a Comment