
ஜம்மு:எல்லோருக்கும் கல்வி என்பது ஜம்மு-கஷ்மீரில் தற்பொழுதும் நீண்ட நெடிய கனவு என்று தலைமை தணிக்கை அதிகாரி(சி.ஏ.ஜி) கூறுகிறார். நிதி முறைகேடு, கல்விக்கான நிதியை வேறு துறைக்கு செலவழித்தல், மத்திய கல்வி திட்டங்கள் அமல்படுத்துவதில் வீழ்ச்சி ஆகியன கஷ்மீர் மாநிலம் தற்பொழுதும் கல்வியில் பின் தங்கியிருக்க காரணம் என்று சி.ஏ.ஜி கூறுகிறது.
ஜம்மு-கஷ்மீர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11 தணிக்கை அறிக்கையில் சி.ஏ.ஜி மாநில அரசை கடுமையாக விமர்சித்தது. கல்வித் துறைக்காக மத்திய அரசின் திட்டமான சர்வசிக்ஷா அபியான் மற்றும் மதிய உணவு திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் கஷ்மீர் மாநில அரசு முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளது.
மாநிலத்தின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு போதிய முன் தயாரிப்புகளை மேற்கொள்ளாததும், உள்ளூர் நிர்வாக கட்டுப்பாட்டு இன்மையும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ளன என்று சி.ஏ.ஜி அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மாநிலத்தில் 3256(12 சதவீதம்) அரசு பள்ளிக்கூடங்களில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு தேவையான எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது சட்டமாகும். ஆனால் தற்பொழுது 12 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமை நிலவுகிறது. மொத்தம் 7016 பள்ளி கூடங்களில் 718 பள்ளிகூடங்கள் ஓராசிரியர் நிறுவனங்களாகும்.
அரசு கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு செல்கிறது.
அரசு கல்வி நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்க்கின்றனர். 69 சதவீதம் முதல் 86 சதவீதம் வரையிலான அரசு பள்ளிகூடங்களில் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் இல்லை. இதுவும் மாணவர்களை கல்வியில் இருந்து அகற்றுவதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment