Tuesday, February 14, 2012

மாலத்தீவு:அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தார் நஷீத்

Former Maldives president Mohamed Nasheedமாலே:தற்போதைய அரசுடன் ஒப்பந்தம் செய்து ஐக்கிய அரசை உருவாக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை பதவி விலகிய மாலத்தீவு முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் நிராகரித்துள்ளார்.
தன்னை பதவியில் இருந்து வெளியேற்றிய அரசுடன் ஐக்கியமாக இயலாது என்று தெரிவித்துள்ள நஷீத், தேர்தல் நடத்த அழுத்தம் கொடுப்போம் என்று கூறியுள்ளார். மாலேயில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் அவர். தனது மாலத்தீவு டெமோக்ரேடிக் பார்டி(எம்.டி.பி) புதிய அரசை அங்கீகரிக்காது என்று நஷீத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக பிரச்சாரம் துவக்கப்படும் என்ற நஷீதின் அறிவிப்பை அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காவின் தெற்காசியா விவகாரங்களுக்கான துணை செயலாளர் ராபர்ட் ப்ளேக் ஐக்கிய அரசை உருவாக்கவேண்டும் என்று நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று புதிய அதிபர் வஹீத் ஹஸன் அறிவித்துள்ளார். அதேவேளையில், நஷீதின் பதவி விலகலுக்கு காரணமான சம்பவங்களை குறித்து விசாரணை நடத்த காமன்வெல்த் நாடுகள் அமைச்சர் அளவிலான குழுவை மாலத்தீவுக்கு அனுப்பும். மாலத்தீவு விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் விவாதித்த 54 உறுப்பினர்களை கொண்ட காமன்வெல்த் அமைச்சர்களின் செயற்குழு இவ்வாறு தீர்மானித்துள்ளது.
புதிய ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக தீவிரவாத குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச்செய்ய வாய்ப்பு இருப்பதாக நஷீதை ஆதரிப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு தங்களை மிரட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.புதிய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று நேற்று அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் அறிவித்துள்ளது.
******************* ************

No comments:

Post a Comment