
ஸன்ஆ:புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துற்றப் மன்சூர் ஹாதி பதவிபிரமாணம் செய்த பிறகு அதிபர் மாளிகை அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்து 26 பேர் மரணமடைந்துள்ளனர். 40 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தெற்கு மாகாணமான ஹழரல்மவ்தில் உள்ள முகல்லாவில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரண்மனை வாசலின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பிக்கப் வேன் வெடித்து சிதறியது. அரண்மனைக்கு பாதுகாவலாக நின்று கொண்டிருந்த குடியரசு படையின் வீரர்கள் பலியானதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஸாலிஹின் மகன் அஹ்மத் குடியரசு படையின் தலைவர் ஆவார்.
அல்காயிதாவுக்கும், ஸாலிஹிற்கும் எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற பழங்குடியினருக்கும் வலுவான செல்வாக்கு உள்ள பகுதிதான் தெற்கு யெமன். அதேவேளையில், தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அல்காயிதா அறிவித்துள்ளது.
குடியரசு படையினரின் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் நடவடிக்கைதான் குண்டுவெடிப்பு என்று அல்காயிதா வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment