
குவைத்: குவைத் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) தமிழ் பிரிவு சார்பாக “முஸஃபர் நகர் கலவரமும், நமது சமூகக் கடமையும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 16-01-2014 அன்று நடைபெற்றது.
கன்னியாகுமாரி ரெஸ்டாரன்டில் உள்ள அரங்கில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு KIFF-ன் தமிழ் பிரிவு தலைவர் ராஸிக் ரஹ்மான் தலைமையேற்றார். மௌலவி ஸாதிக் நிஹார் அல்தாஃபி அவர்கள் இறைமறை வசனங்களை ஓதினார். தொடர்ந்து ராஸிக் ரஹ்மான் அவர்கள் நிகழ்ச்சி பற்றிய அறிமுகவுரையை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் யாமுஹைதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது சிறப்புரையில் முஸஃபர் நகரில் நடைபெற்ற கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். கலவரத்திற்குப் பிறகு நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துயர் துடைப்புப் பணிகள் பற்றியும், நீதிக்கான போராட்டங்கள் பற்றியும் விளக்கி கூறினார்.
அகதிகள் முகாம்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் பாப்புலர் ஃப்ரண்டின் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் சிறப்பாக செய்யப்பட்டு வருவதைப் பற்றி கூறினார். மேலும் வழக்கறிஞர்கள் குழுக்கள் அமைத்து தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதன் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இதுவரைக்கும் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
அரசின் பார்வைக்கு மக்கள் படும் கஷ்டங்களையும், குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கொண்டு சென்றதையும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பொதுமக்களின் கேள்விகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் யாமுஹைதீன் அவர்கள் விளக்கம் அளித்தார்.
இறுதியாக ஜாஹிர் ஹுஸைனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


No comments:
Post a Comment