
லக்னோ: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மன்னர்களைப் போல நடந்துகொள்கின்றார்கள் என்று சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, ஹிந்தி நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சியின் போதே, தங்களது மனதில் அரசராகப் போகிறோம் என்ற எண்ணம் வந்து விடுகிறது.
பிரிட்டிஷ்காரர்கள் தான் ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பதவிகளை ஏற்படுத்தினர். அப்போது அவர்கள் மனதில் மன்னர்கள் என்ற நினைப்பை ஆட்சியாளர்கள் விதைத்தனர். இவர்களின் பணி அப்போது பிரிட்டிஷ்காரர்களுக்கு தேவைப்பட்டது. ஆகையால் அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த நிலை இன்றும் தொடர்கிறது.இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததும், ஐஏஎஸ்., ஐபிஎஸ் பதவிகளை ஒழித்திருக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் உண்மையான மன்னர்கள். அதை மறந்து விட்டார்கள்.சிறிய எண்ணிக்கையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், முழு அமைப்பையும் ஆக்கிரமிக்கப் பார்க்கின்றனர். முன்னேறிய நாடுகளான பிரிட்டன், ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) கிடையாது. அதுபோன்று சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவிலும் அப்பணிகளை ஒழித்திருக்க வேண்டும்.துர்கா சக்திக்கு முன்பும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் சிறையில் கூட அடைக்கப்பட்டுள்ளனர். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ அல்லது மற்ற ஐஏஎஸ் அதிகாரிகளோ வாய் திறக்கவில்லை.இப்போது தவறு செய்த ஒரு அதிகாரி மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதற்காக, அரசுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.மாநில ஹஜ் குழு, வக்ஃபு வாரியம், சிறுபான்மையினர் நலத் துறை போன்ற துறைகளில், முஸ்லிம் அதிகாரிகள் உரிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்றார் ஆஸம் கான்.
No comments:
Post a Comment