அஹ்மதாபாத்: குஜராத்தில் போலி எண்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி அல்ல என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவியதாக கூறி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுண்டர் மூலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் இவ்வழக்கில் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பாண்டே, வன்ஜரா, சிங்கால் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதேபோல் குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தப் புகாரில் சிக்கினார்.
இந்த சம்பவத்தில் மற்றொரு மத்திய அரசு அமைப்பான ஐபிக்கும் தொடர்பு இருப்பதாக கூறியதால் சிபிஐக்கும் ஐபிக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனிடையே இவ்வழக்கில் சி.பி.ஐ தரப்பிலிருந்து இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி அல்ல என்றும், மேலும் மாணவி இஷ்ரத் ஒரு கேடயமாக மட்டுமே பயன்படுத்தப் பட்டதாகவும் சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்பட்ட நான்குபேருமே அப்பாவிகள் என்று தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளன.

No comments:
Post a Comment