
கெய்ரோ:நீண்ட காலத்திற்கு பிறகு ஹமாஸ்- ஃபதஹ் இயக்கங்கள் கையெழுத்திட்ட நல்லிணக்க ஒப்பந்தங்களை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த இரு அமைப்பினரும் தீர்மானித்துள்ளனர்.
வியாழக்கிழமை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இரு அமைப்பின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.ஃபலஸ்தீன் ஐக்கிய அரசு உருவாக்குவதை ஒப்பந்தத்தில் முக்கியமானது என்று ஃபதஹ் தலைவர் அஸ்ஸாம் அல் அஹ்மத் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவித்தார்.
காஸ்ஸாவில் வாக்காளர்களின் பதிவு நடவடிக்கைகளை ஃபலஸ்தீன் தலைமை தேர்தல் கமிஷன் பூர்த்தியாக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது. ஃபதஹிற்காக தேர்தல் கமிஷன் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி காஸ்ஸாவை ஆளும் ஹமாஸ் அங்கு பதிவு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.
ஊடகங்கள் மூலமாக பரஸ்பரம் தாக்குதலை நிறுத்தவேண்டும், ஃபலஸ்தீன் கைதிகளின் விடுதலைக்காக ஒன்றாக செயல்படுதல் உள்ளிட்ட ஷரத்துக்களை கொண்ட ஒப்பந்தத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தர் நாட்டில் வைத்து இரு அமைப்புகளின் தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் பல காரணங்களால் ஒப்பந்தம் அமல்படுத்தாமலிருந்தது.
ஹமாஸ் – ஃபதஹ் தலைவர்களை உட்படுத்தி எகிப்திய வல்லுநர்கள் தலைமை வகிக்கும் குழு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும். ஃபதஹுடன் இணைந்து சுதந்திர அமைச்சரவையை உருவாக்குவது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்று ஹமாஸ் அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர் இஸ்ஸத் அல் ரஸாக் கூறினார்.
No comments:
Post a Comment