Wednesday, May 23, 2012

ஊழல்:தகவல் தருபவர்களும், தடுக்க போராடுவோரும் கொலைச் செய்யப்படுகின்றனர்: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு!


புதுடெல்லி:ஊழல் குறித்து தகவல்கள் தருபவர்களும், முறைகேடுகளை தடுக்கப் போராடும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பாலகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை இதுத் தொடர்பாக அவர் பேசியது: பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் ஒதுக்கீடுகளில் நடைபெற்ற ஊழல்களை வெளிப்படுத்தியவர் கர்நாடகத்தை சேர்ந்த கர்நாடக கூட்டுறவு சங்கத்தின் துணை இயக்குநர் எஸ்.பி. மகந்தேஷ். அவர் சமீபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கும் பாதுகாப்புத் துறையில் நடைபெற்ற தாத்ரா வாகனங்கள் வாங்கியதில் நிகழ்ந்த முறைகேட்டுக்கும் தொடர்பு உள்ளது. ஏனெனில் தாத்ரா முறைகேட்டில் தொடர்புடைய பிஇஎம்எஸ் நிறுவன கூட்டுறவு வீடு ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வந்துள்ளார்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்கள், முறைகேடுகளில் ஈடும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகளும் கொல்லப்படுவது கடந்த ஓராண்டில் மிகவும் அதிகரித்துள்ளது என்று பாலகோபால் குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment