அஹமதாபாத்:’ககன்
சேதி’ எனும் சமூக நீதி மையம் அஹ்மதாபாத்தில் ஆர்.சி. தொழில்நுட்பக்
கல்லூரியின் எதிரில் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் இதுவரை
நடந்துள்ள மோதல்கள் குறித்த அரங்கம்(conflictorium) ஒன்று துவங்கப்படும்
என்று அறிவித்துள்ளது. மேலும் இதற்கு தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள
பங்களாவை அளித்த பார்சி பெண்மணிக்கு தாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும்
அது தெரிவித்துள்ளது.
இந்த அரங்கத்திற்கான வேலைகள்
தொடங்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் சில மாதங்களில் முதற்கட்டமாக சில
அறைகளில் குஜராத் நிகழ்வுகள் குறித்து கண்காட்சி நடைபெறும் என்றும்
தெரிவித்துள்ளது.
மேலும் இதில் கடந்த 1960-ஆம் ஆண்டு முதல்
குஜராத்தில் நடைபெற்று வந்துள்ள கலவரங்கள் மட்டுமின்றி சாமான்ய மக்கள்
சந்தித்து வரும் பிரச்சனைகளான தண்ணீர் பிரச்சனை மற்றும் நிர்வாகம், கல்வி,
ஊழல் ஆகிய பிரச்சனைகள் அனைத்தும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும்
ககன் சேதி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பிரச்சனைகள் முன்பு எவ்வாறு
தீர்க்கப்பட்டன என்றும் தற்போது அந்தப் பிரச்சனைகளின் நிலை என்ன என்பது
குறித்தும் தகவல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் முன்பு
ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை எவ்வாறு
தீர்ப்பது மற்றும் இனி இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன தற்காப்பு
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிந்துகொள்வதே இதன் நோக்கம் என்றும்
அது கூறியுள்ளது.
இதன் மூலம் குஜராத்தை மக்கள் வாழ நல்ல
மாநிலமாக மாற்ற முயன்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. மேலும்
கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களை தெரிவிக்க வாய்ப்பு
அளிக்கப்படும் என்றும் மேலும் இந்த கண்காட்சிக்கு தேவையான தகவல்களை
சேகரிக்க தனது ஆராய்சிக் குழுவை அனுப்பியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற அரங்கம்(conflictorium)
இந்தியாவில் இதுதான் முதன்முறை என்றும் இதனை முழுமையாக்க சில ஆண்டுகள்
பிடிக்கும் ஆனால் இன்னும் சில மாதங்கில் இதனை திறக்க தாங்கள் முயன்று
வருவதாகவும் சேதி தெரிவித்துள்ளது.
குஜராத்தில் இன்னொரு முக்கியமானதொரு
நிகழ்வாக கருதப்படுவது குல்பர்கா சொசைட்டியில் உள்ள 19 பங்களா மற்றும் 8
குடியிருப்புகளை(FLATS) மருத்துவமனைகளாகவும் கல்விக் கூடங்களாகவும் மாற்ற
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக குல்பர்கா
சொசைட்டி கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரியின் மகன்
தன்வீர் ஜாஃப்ரி கூறியுள்ளதே ஆகும்.
குல்பர்கா சொசைட்டியில் உள்ள வீடுகள்
மற்றும் பங்களாக்கள் மருத்துவமனைகளாகவும் கல்விக் கூடங்களாகவும்
ஆக்கப்பட்டாலும் இஹ்சான் ஜாஃப்ரியின் வீடு மட்டும் குஜராத் முஸ்லிம் இனப்
படுகொலைகளை பறைசாற்றும் சின்னமாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படுகொலையானது இஹ்சான் ஜாஃப்ரி
மற்றும் அவரை நம்பிவந்த முஸ்லிம் மக்களுக்கு நடந்த கொடூரம் மட்டும் அல்ல
இந்த அரசின் கையாலாகத் தனமும்தான் என்று தன்வீர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சின்னம் மற்ற சமூக மக்களின் அன்பு மற்றும் உதவிகளை பறைசாற்றும்
சின்னமாகவும் இது விளங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மிகச்சிலரைத் தவிர அனைவரும்
குல்பர்கா சொசைட்டியை நினைவுச் சின்னமாக மாற்ற விரும்புகின்றனர் என்றும்
முன்னதாக அங்கு உள்ள ஒவ்வொரு பங்களாவையும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு
அடையாளமாக மாற்றும் எண்ணம் இருந்ததாகவும் ஆனால் காலம் கடந்து வருவதால்
ஜாஃப்ரியின் வீட்டை மட்டும் நினைவுச் சின்னமாக ஆக்க
முடிவெடுக்கப்பட்டத்தாகவும் தெரிவித்தார். இதன் மூலம் 5000 சதுர
மீட்டர்களை கொண்ட குல்பர்கா சொசைட்டி 2002 கலவரத்திற்குப் பின்னர் நல்ல
நோக்கத்திற்கு பயன்படப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தன்வீரிடம் தற்போது நடந்து வரும்
மோடிக்கு எதிரான சட்டரீதியான போராட்டம் குறித்து கேட்கப்பட்டதற்கு
பாதிக்கப்பட்ட அனைவரும் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக
சேவகர்கள் அனைவரும் போராடி வரும் வேளையில் நாங்கள் மட்டும் எவ்வாறு
போராட்டத்தை கைவிடுவோம்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இந்த
போராட்டம் நமது இந்திய நாட்டில் நீதிக்காக போராட வேண்டும் என்னும் உணர்வை
ஏற்படுத்தும் எனவும் தங்களுக்கு மீடியா மற்றும் நீதித்துறை ஆகிவை மீதும்
மற்றும் மற்ற சமூகத்தைச் சேர்ந்த நல்லவர்கள் மீதும் தங்களுக்கு நம்பிக்கை
இருப்பதாகவும் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் தன்வீர்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment