
ப்ரஸ்ஸல்ஸ்:பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஐரோப்பிய யூனியனின் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
27 ஐரோப்பிய நாடுகளில் 17 நாடுகள் மட்டுமே திருத்தம் செய்வதற்கான பரிந்துரையை ஆதரித்துள்ளது. தங்களின் விருப்பத்திற்கு மாற்றமான எவ்வித திருத்தங்களையும் அங்கீகரிக்கமாட்டோம் என பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் அறிவித்துள்ளார்.
திருத்தம் குறித்த பரிந்துரை மீது வாக்கெடுப்பு நடத்தினால் பிரிட்டன் அதனை வீட்டோ செய்யும் என காமரூன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க பிரிட்டனுக்கு சலுகை அளிக்கவேண்டும் என காமரூனின் கோரிக்கைக்கு பிரான்சும், ஜெர்மனியும் ஒப்புக்கொள்ளாததால் திருத்தம் கொண்டுவர பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனி மற்றும் பிரான்சின் தலைமையில் ஐரோப்பிய நாடுகளின் மீது வலுவான நிதியியல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட திருத்தங்கள் தேவை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து யூரோ கரன்சியை காப்பாற்றத்தான் இந்த கடுமையான கட்டுப்பாடுகள். இதன் ஒரு பகுதியாக பட்ஜெட்டில் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு அதிகமானால் அந்த நாட்டின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஐரோப்பிய யூனியன் அங்கீகாரம் வழங்குவதுதான் இந்த பரிந்துரை. அனைத்து ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெற முடியாவிட்டாலும் அடுத்த ஆண்டு மார்ச் முதல் இந்த திருத்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 23 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.
No comments:
Post a Comment