OCT 09, பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டம், தகானியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிரா யாதவ்,30. இவரின் மனைவிரினாதேவி, 25. கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் மனைவி வேறொருவருடன் தகாத உறவு வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த 5ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியின் முடியைப் பிடித்து இழுத்து, யாதவ் சண்டையிட்டார்.
மனைவியும் பதிலுக்கு பேசினார். ஆத்திரம் அடைந்த யாதவ், அருகில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். துண்டான தலையை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார். வெட்டப்பட்ட தலையுடன், ஊர்வலமாகச் சென்ற அவரைப் பற்றி, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், ஹிரா யாதவை கைது செய்தனர்.
சிந்திக்கவும்: கற்பொழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பது போல ஒரு மாயயை ஆணாதிக்க வெறியர்கள் சித்தரித் துள்ளனர். கற்பொழுக்கம் என்பது ஆண்களுக்கும்தான் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். ஹிந்துத்துவா மனுதர்மம்இவர்களுக்கு போதித்தது அப்படித்தான் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள், கணவனே கண்கண்ட தெய்வம் இப்படி சொல்லி பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளார்கள்.
காலையில் எழுந்ததும் பெண்கள் தங்கள் கணவனின் காலை தொட்டு கும்பிடுவது முதல் இது தொடங்குகிறது. மேலே செய்தியில் சொல்லப்பட்ட தகாத உறவு ஆண்களுக்கு இருந்தால் இதை இவர்கள் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். இதை சம்மந்த பட்ட ஆண்களின் தாய்மார்கள் தாங்களும் ஒரு பெண் என்பதை மறந்து என் மகனுக்கு என்ன அவன் ஆம்பள சிங்கம்! சேத்தை கண்டால் மிதிப்பான்! தண்ணியை கண்டால் கழுவுவான்! என்று ரொம்பவும் பெருமையாக வேறு சொல்லி கொள்வார்கள்.
ஆண்கள் குடிக்கலாம், கற்பொழுக்கம் தவறி நடக்கலாம், கட்டிய மனைவியை வைத்து கொண்டு வைப்பாட்டிகள், சின்ன வீடுகள் வைத்துக் கொள்ளலாம் இதுவெல்லாம் ஆண்வர்க்கம் பெருமைப்படும் விஷயங்கள். அதே ஒரு பெண் அறியாமையில், தனது இயலாமையில், தவறிழைத்தால் அதற்க்கு இதுபோல் தலையை வெட்டி கோரதாண்டவம் புரிவார்கள். இதை மற்ற ஆண்களும் பெருமையாக பேசிகொள்வார்கள் அவன் வீரன் பெண்டாட்டி தப்பு பண்ணினாள் வெட்டி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போயிட்டான் என்று.
ஆண்கள் காதலிப்பார்கள் அது தப்பில்லை அதை வைத்து ஆட்டோ கிராப் படம் எல்லாம் எடுப்பார்கள் ஒரு காதல் இல்லை! வாழ்க்கையில் பலகாதலை தாண்டி வருவார்கள். அதே நேரம் பெண்கள் படிக்க கூடாது, அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று ஆயிரம் கட்டுபாடுகள். பெண்பிள்ளைகளை நம்பாமல் அவர்களை தொடர்ந்து உளரீதியாக நெருக்கடிகளை கொடுப்பது இப்படியாக அவர்களுக்கெதிரான வன்முறை அவர்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும்.ஒழுக்கம், கட்டுப்பாடு என்பது நாணயத்தின் இரண்டு பகுதிகள்! ஆண்கள், பெண்கள் இருவரும் அதை சமமாக பாவிக்க வேண்டும். அதைவிட்டு அதை பெண்களுக்கு மட்டும் என்று திணிக்கும் நிலை மாறவேண்டும்.

No comments:
Post a Comment