
புதுடெல்லி:தாத்ரா வாகன ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு அரசு மீது குற்றம் சாட்டும் பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி. தாத்ரா வாகன ஒப்பந்தத்தை மேற்கொண்டது என்.டி.ஏ அரசு என்றும், என்.டி. ஏ ஆட்சிகாலத்தில் மூன்று வருடங்களில் 2950 தாத்ரா ட்ரக்குகள் இறக்குமதிச் செய்யப்பட்டுள்ளதாக ஏ.கே.அந்தோணி மக்களவையில் தெரிவித்தார்.
இதுக்குறித்து மக்களவையில் அந்தோணி கூறியது:
1997 மற்றும் 2003 -ஆம் ஆண்டுகளில் என்.டி.ஏ அரசு தாத்ரா வாகன ஒப்பந்தத்தை புதுப்பித்தது. 1999-ஆம் ஆண்டு முதல் 2001 -ஆம் ஆண்டு வரை 2950 தாத்ரா ட்ரக்குகளை என்.டி.ஏ அரசு இறக்குமதிச் செய்துள்ளது.
2008-ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு ட்ரக்கு கூட ராணுவம் வாங்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக ராணுவத்தின் ஆயுதபலத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.
கடைசிக் கட்டத்தை அடைந்த ஒப்பந்தங்களைக் கூட ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் ரத்துச் செய்திருக்கிறோம். இது காலதாமதம் ஏற்பட காரணமானது. ராணுவத்தின் தேவைக்கேற்பவே ஆயுதங்களையும், இதர சாதனங்களும் வாங்கப்படுகிறது. இது அரசின் நிர்பந்தத்தின் அடிப்படையில் அல்ல.
ஐ.மு அரசு தாத்ரா ட்ரக்குகளுக்கு பதிலாக வேறு வாகனங்களை வாங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டின் பாதுகாப்புத்துறை தொடர்பான பட்ஜெட்டில் 99 சதவீதமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவத்தின் ஆயுத பலம் குறித்து தரைப்படை தலைமை தளபதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வித ஆச்சரியமுமில்லை. ராணுவத்திற்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் அந்தந்த காலக்கட்டங்களில் பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதிகள் கடிதம் எழுதுவது சாதாரணமானதாகும். இவ்வாறு அந்தோணி தெரிவித்தார்
No comments:
Post a Comment