Thursday, January 19, 2012

அமெரிக்க அதிகாரிக்கு பாகிஸ்தானில் நுழைய அனுமதி மறுப்பு


Grossman
இஸ்லாமாபாத்:ஆஃப்கான் மற்றும் பாகிஸ்தானிற்கான அமெரிக்க பிரதிநிதி மார்க் க்ரோஸ்மான் பாகிஸ்தானில் நுழைவதற்கு பாக்.அரசு அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தான் வருவதற்கு க்ரோஸ்மான் அனுமதி கோரியதாகவும், ஆனால் தற்பொழுது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய இயலாது என அந்நாட்டு அரசு மறுத்ததாகவும் மூத்த பாக்.அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாக்.சுற்றுப்பயணத்திற்கான அனுமதி அமெரிக்க அதிகாரிக்கு ஏன் மறுக்கப்பட்டது என்பது குறித்து விளக்க மூத்த அதிகாரி மறுத்துவிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் நேட்டோ நடத்திய அநீதமான தாக்குதலில் 24 பாக்.ராணுவத்தினர் அநியாயமாக கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான உறவு சீர்குலைந்தது. இதில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை க்ரோஸ்மானின் அனுமதி மறுப்பு நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தாலிபானுடன் அமெரிக்காவின் நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிக்கும் க்ரோஸ்மான் இந்த வாரம் ஆப்கானிஸ்தான், கத்தர், யு.ஏ.இ ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் நடத்த இருந்தார்.
நேட்டோ தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா உடனான உறவை புதுப்பிப்பதற்கான பாக்.அரசின் தீர்மானம் பாராளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

No comments:

Post a Comment