பக்கங்கள்

Tuesday, February 9, 2016

இந்தியா மனிதத்தை இழக்கிறதா?

ந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம்.  காரணம் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம்  ஆனால், இன்றைய இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாக செல்கிறது.

கருப்பின மக்களுக்கு அமெரிக்கா ஒரு காட்டுமிராண்டி நாடு என்று நாம் இங்கு பேசுகிறோம்  ஆனால் அதை பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நாம் சற்று  சிந்திக்க வேண்டும்.

அன்பான, பண்பான நாடு எனப் போற்றப்பட்ட இந்தியா, இன்று ஜாதிவெறி / மதவெறி / மொழிவெறி தாண்டி இனவெறியில் வந்து நிற்கிறது.

செய்தி இதுதான்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள சோழ தேவன ஹள்ளியை சேர்ந்தவர் சஃபானா தாஜ் (35). இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு தனது கணவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந் தார். அப்போது ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்த முகமது அஹாத் இஸ்மாயில் (21) என்ற கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் சஃபானா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்நிலையில், பொறுப்பில் இருக்கும் பாஜகவின் கவுன்சிலர் பங்காரு லோகேஷ் பொறுப்பற்ற முறையில்   அமைதியாக இருந்த பொதுமக்களை தூண்டி  முகமது அஹாத் இஸ்மாயில் என்பவர்  மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளார். முகமது அஹாத் இஸ்மாயில் அடி உதைவுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மேலும் , ஆப்பிரிக்க மாணவர்   அஹாத் இஸ்மாயிலின் காரை அடித்து நொறுக்கி, பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். அந்த வழியாக சென்ற அனைத்து ஆப்பிரிக்க மாணவர்கள் மீதும் பாஜகவின் கவுன்சிலர் பங்காரு லோகேஷ் தலைமையிலான கும்பல் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியது.

இச்சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து, தான்சானியா நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி அந்த வழியாக சென்றுள்ளார்.  பாஜகவின் கவுன்சிலர் பங்காரு லோகேஷ் கும்பல்  அவரையும் தாக்கி, ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கியது. மண்டை உடைந்த நிலையில் அழுது கொண்டே, வீடுகளின் கதவுகளை தட்டியுள்ளார்.

ஆப்பிரிக்க மாணவியின் நிலைக் கண்டு அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது டீ-ஷர்ட்டை கொடுத்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த பாஜகவின் கவுன்சிலர் பங்காரு லோகேஷ் கும்பல் அவரையும் தாக்கியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர்களும் வேறு சிலரும் பெண்ணுக்கு உதவாமல் வேடிக்கை பார்த்துள் ளனர். ஒரு வழியாக அந்த பெண் அங்கு வந்த அரசு பேருந்தில் தப்பிக்க முயற்சித்த போது உள்ளே இருந்த பயணிகள் அந்த பெண்ணை கீழே தள்ளியுள்ளனர்.

இதனால் நள்ளிரவில்  மண்டை உடைந்த நிலையில் உடலெங்கும் காயத்துடன் அம்மாணவி அழுது கொண்டே ஹெசரகட்டா காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.  அங்கேயும் கொடுமை! சம்பவத்தில் பாஜகவின் பங்கு இருப்பதால்  காவலர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து மறுநாள் ஆப்பிரிக்க மாணவர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆச்சார்யா கல்லூரி பேராசிரியர்களின் உதவியுடன் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனால் வேறு வழியின்றி பாஜகவின் கவுன்சிலர் பங்காரு லோகேஷ் தலைமையிலான கும்பலை  காவல்துறை கைது செய்தது. அமைதிக்கான புது சகாப்தம் யோகா என்று நாட்டின் பிரதமர் மோடி பாடம் எடுத்தது மக்களுக்கு மட்டும்தானா? அவர்கள் கட்சியை சார்தவர்களுக்கு இல்லையா?

 நமக்கு நம்மிடம் அன்பு இல்லை, சக மனிதர்களிடம் அன்பு இல்லை, இயற்கையிடம் அன்பு இல்லை இவ்வாறான நிலையை இன்று மக்களிடையே உருவாக்கியவர்கள் இன்றைய ஆட்சியாளர்களே!

மேலும்,  இந்த சம்பவம் தொடர்பாக  இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மவும்  மோடியும் தொடர்ந்து மௌனம் காத்து வருவது அதிர்ச்சியை கொடுக்கிறது.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவில் கல்வி பயிலும் கறுப்பின மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எங்களை பார்த்தாலே ஓடுகிறார்கள். நட்பு வேண்டி, நாங்களே வலிய போய் பேசினால் கூட “உங்களிடம் என்னால் நட்பாக இருக்க முடியாது” என்கிறார்கள்.. நாங்கள் ஏதாவது எதிர்செயல் புரிய வேண்டும் என்று எங்களைத் தூண்டுகிறார்கள். ஒருவேளை நாங்கள் எதிர்த்தால், கும்பலாக கூடி அடிக்கிறார்கள்.

அன்பான நாடு என்று எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இத்தனை இனவெறியை நாங்கள் இந்தியாவில் எதிர்பார்க்கவில்லை. எங்களை பார்த்தவுடன் கைக்குட்டையினால் முகத்தை மூடி கொள்கிறார்கள். எங்களுக்கு தீராத நோய் இருப்பதை போல, எங்களிடம் துர்வாடை வீசுவதை போல. ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல, ஒன்றுகூடி நின்று எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று வேதனையுடன் அம்மாணவர்கள் கூறியதை படிக்கும் போது கண்களில் கண்ணீரைத் தவிர வேற ஒன்றும் இல்லை.

பெரும்பான்மையான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைச் சொல்லியே வளர்க்கிறார்கள். ஆனால், வரும் துணையையும் சூழ்நிலையையும் பொறுத்து பிள்ளைகள் மாறிவிடுகிறார்கள், காலப்போக்கில் அரசியல்வாதிகள்  அவர்களை காட்டுமிராண்டிகளாக  மாற்றிவிடுகிறார்கள்.

எங்கும் பிளவு, பிரிவினை, ஆக்கிரமிப்புகள், இனஅழிப்புகள், ஓயாத கலவரங்கள். இது ஒரு பக்கம் என்றால், இது போன்ற சமயங்களில் நமக்குத் தலைமை தாங்க வேண்டியவர்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே அவ்வாறு இல்லாமல் மேலும் நம்மை தூண்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பதே கொடுமை.
இந்த நிலை மாறவேண்டும். மாறுமா?

No comments:

Post a Comment