பக்கங்கள்

Wednesday, January 15, 2014

இனி இந்தியா போலியோ இல்லா தேசம்!

polio
புதுடெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் ஒரு போலியோ தாக்கிய சம்பவம் கூடவெளிவராத நிலையில், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று திங்கள் கிழமை அறிவித்தது.நேற்று மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.
இந்தியாவில் போலியோ தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய்தாக்கியிருந்தது. 2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.
இந்த காலகட்டங்களில் பொதுமக்களுக்கு போலியோ தடுப்பு மருந்து தருவதன் மூலமே இந்தச் சாதனை எட்டப்பட்டிருக்கிறது . இது பெரும்பாலும் இந்தியாவின் பொதுச்சுகாதாரத் துறையில் பெரும்வெற்றியாகக் கருதப்படலாம்.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து தரும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில், சுமார் 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் 209 மில்லியன் வீடுகளுக்கு சென்று, சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்துதந்தனர். இந்தியாவில் போலியோ ஒழிப்பை ஒரு ” பிரம்மாண்டமான மைல் கல்” என்று வர்ணித்த ஐ.நா மன்ற குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்தியப் பிரிவின், போலியோ தடுப்பு நடவடிக்கைகள் பிரிவுக்கான தலைவி, நிக்கோல் டாய்ட்ச்,இனி புதிதாகத் தோன்றியிருக்கும் ஒரு வகை தட்டம்மையை ஒழிப்பதை இந்தியா புதிய இலக்காகக் கொண்டிருக்கிறது என்றார்.
ஆனால் வாய்வழியாகக் கொடுக்கும் சொட்டு மருந்துகள் மட்டிலுமே தரப்பட்ட இந்தியாவில் , போலியோ ஒழிக்கப்பட்டிருந்தாலும், அபூர்வமாக இந்த நோய்மீண்டும் தலை தூக்காதிருக்க வேண்டுமானால், ஊசி வழியாகவும் இந்த மருந்துதரப்பட வேண்டும் என்கிறார் பொதுச்சுகாதார வல்லுநர் இளங்கோ.
கடந்த ஆண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் , போலியோ அதிகமாகப் பரவியிருக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து, இந்தியாவை நீக்கியது.இன்னும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் இந்தப்பட்டியலில் இருக்கின்றன. 1980ல் இந்தியாவில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவதாக இப்போது போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயும் ஒழிக்கப்படுகிறது.
போலியோ என்ற இந்தக் கொடிய நோய் தாக்கிய ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே மரணம் ஏற்படலாம், அல்லது முழுமையாக அவயங்கள் செயலிழக்கும் நிலைஏற்படலாம்.பழங்காலங்களிலிருந்து சமூகங்களைப் பீடித்த இந்த நோய், 1980களில் கூட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்பட்டது. அப்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் மூன்றரை லட்சம் பேர் போலியோ நோயால் தாக்கப்பட்டனர்.
இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும்,போலியாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், இயல்பு வாழ்க்கையை நடத்த போதிய பொது ஏற்பாடுகள் இல்லை என்கிறார் போலியோவால் பாதிக்கப்பட்ட  ஓய்வு பெற்ற செய்தியாளர் எச்.ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment