முஸஃபர் நகர்: முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலங்களையும், இதர சொத்துகளையும் கபளீகரம் செய்ய ஹிந்துத்துவா சக்திகளுடன் இணைந்து அரசும் சூழ்ச்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ரூ. 5 லட்சத்திற்குப் பதிலாக தங்களுடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்ப வரமாட்டோம் என்றும், அங்குள்ள தங்களுடைய சொத்துகளுக்கு உரிமை கோர மாட்டோம் என்றும் அவர்களிடம் அரசு பிரமாணப் பத்திரம் எழுதி வாங்குவதாக ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
ஆனால், பெரும்பாலான குடும்பத்தினரும் இத்தகையதொரு பிரமாணப் பத்திரம் எழுதிக் கொடுக்க மறுத்து விட்டனர்.
அதேவேளையில் பாதுகாப்பு குறித்த பீதி காரணமாக ஒரு போதும் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பாத 1800 குடும்பத்தினருக்குத்தான் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்று அரசுத் தரப்பு விளக்கம் அளிக்கிறது. ஆகையால் இவர்களுக்கு வேறு ஏதேனும் இடத்தில் மறு வாழ்வு அளிக்க அரசு திட்டமிடுவதாக கூறுகிறது.
ஆனால், உண்மையான விலையை விட மிகக் குறைவான இழப்பீட்டை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துகளைக் கைப்பற்றுவது அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
முஸஃபர் நகரில் நடந்த கலவரங்களின் பின்னணியில் ஜாட் இனத்தவர்கள் முஸ்லிம்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கு நடத்திய சதித்திட்டமாக இருக்கலாம் என்று தேசிய ஊடகங்கள் சந்தேகத்தை வெளியிட்டிருந்தன.
இவர்களுடன் அரசும் கை கோர்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அக்டோபர் 30-ஆம் தேதி ஹுஸைன்பூர் கிராமத்தில் 3 முஸ்லிம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். இது முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்த கிராமமாகும்.
அருகில் உள்ள முஹம்மது பூர் ராய்சிங் கிராமத்திற்கு கரும்பு மற்றும் வைக்கோல் சேகரிக்க இக்குழந்தைகள் சென்றிருந்தபோது தாக்கப்பட்டு பலியானார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய கிராமத்திற்கு வருவதையும், அவர்களின் நிலங்களில் உள்ள பொருட்களைச் சேகரிப்பதையும் தடுப்பதே இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கமாகும் என்று அப்பகுதியின் சர்பஞ்சான (பஞ்சாயத்துத் தலைவர்) ஷானவாஸ் கூறுகிறார்.
25க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி அஜ்மல், மெஹர்பான், அம்ரோஸ் ஆகியோரை கொலை செய்துள்ளனர்.
முஹம்மது பூர் ராய்சிங் கிராமத்தின் முன்னாள் தலைவர் ஃபெரு சவுதரி உள்ளிட்ட பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிலர் கிராமத்திற்கு திரும்ப ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், இதனை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அரசும் இதற்கு துணை போவதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment