பக்கங்கள்

Tuesday, June 25, 2013

இந்திய நகரங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு!


aaadrones1புதுடெல்லி:பெருநகரங்களில் குற்றங்களை தடுக்கும் விதமாக ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு, ஹெலிகாப்டரில் கமாண்டோக்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
“பாதுகாப்பான நகரம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும்.
இதன் கீழ், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர்,அஹ்மதாபாத் ஆகிய ஏழு நகரங்களில் வான்வழி பாதுகாப்பு திட்டமிடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்களில் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த நவீன கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது இதில் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த நகரங்களின் பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர்கள், நவீன கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஹெலிகாப்டர்களில் கமாண்டோ வீரர்களை பயன்படுத்த வேண்டும். நகரங்களில் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிதாக வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதலில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு ஆகியவற்றில் வான்வழி பாதுகாப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்திருக்கிறது.
வான்வழி கண்காணிப்பு முறையை, பலூன் வழி கண்காணிப்பு, ஆளில்லா விமானம், ஹெலிகாப்டர் ஆகியவற்றால் செயல்படுத்தலாம். அவற்றில் சக்தி வாய்ந்த கேமராக்கள், நுண்ணிய சென்சர்கள் உள்ளிட்ட கருவிகளை சந்தர்ப்பத்தின் அவசியத்துக்கு ஏற்றாற்போல அமைக்கலாம். இந்த கருவிகள் மூலம் பெறப்படும் விடியோ, ஆடியோ, மற்றும் எழுத்துபூர்வ தகவல்களை கட்டுப்பாட்டு மையத்துக்கு அளிக்க வேண்டும். குற்றங்களை தடுக்கவும் குற்றம் நிகழ்ந்த பின்னர் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் இந்த தகவல்கள் பயன்பட வேண்டும்.
நகரம் முழுவதும் சிசிடிவி நெட்வர்க் இருக்க வேண்டும். பொது இடங்கள், முக்கியமான கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிசிடிவி மூலமான கண்காணிப்பு நெட்வர்க் அமைக்க வேண்டும் என்று வழிகாட்டுதலில்கூறப்பட்டிருக்கிறது. நவீன் கருவிகள், பாதுகாப்பு முறைகளை அறிமுகம் செய்தாலும் காவல் துறையில் மனிதர்களை ஈடுபடுத்துவதை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் குற்றங்களை தடுக்கவும், எதிர் நடவடிக்கைகள் எடுக்கவும் இந்த வழிகாட்டுதல்கள் உறுதி செய்யும் என்று உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment