பக்கங்கள்

Saturday, February 9, 2013

கலங்கி தெளியும் துனீசியா அரசியல்!


New Uncertainty Grips Tunisia After Assassination
துனீஸ்:எதிர்கட்சி தலைவர்களில் பிரமுகரான சுக்ரி பிலைதின் கொலை துனீசியாவில் மீண்டும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை தொடர்ந்து நடந்த இரங்கல் கூட்டத்தில் நடத்திய உரையில், “அமைச்சரவை மறு சீரமைக்கப்படும்’ என்ற பிரதமர் ஹமதி ஜபாலியின் அறிவிப்பை ஆளுங்கட்சியான அந்நஹ்ழா நிராகரித்துவிட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை உடன் உருவாக்கப்படும் என்ற ஜபாலியின் அறிக்கை கட்சியுடன் கலந்துபேசி எடுக்கப்பட்ட முடிவல்ல என்று அந்நஹ்ழா துணை தலைவர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
கூட்டு கட்சி அமைச்சரவை உருவாக்க அனைத்துக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் துனீசியாவுக்கு தற்போது அரசியல் கட்சிகள் அடங்கிய அரசுதான் தேவை என்று அப்துல் ஹமீத் கூறினார்.
தற்போதைய அமைச்சரவையை கலைத்துவிட்டுஅரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என்று புதன்கிழமை ஜபாலி அறிவித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரபு புரட்சிக்கு பிறகு நடக்கும் முதல் அரசியல் கொலைதான் பிலைதின் படுகொலை. வீட்டில் இருந்து வெளியே இறங்கும் வேளையில் மோட்டார் பைக்கில் வந்த மர்ம கும்பல் வரை சுட்டுக்கொலைச் செய்தது.இதனைத் தொடர்ந்து உருவான போராட்டங்கள் நேற்று பல இடங்களுக்கு பரவியுள்ளது. உள்துறை அமைச்சகத்துக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
மத்திய துனீசியாவில் போலீசாருக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். துனீசிலும், கப்ஸாவிலும் போராட்டக்காரர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகையை பிரயோகித்தது. போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். எதிர்கட்சிக்கு ஆதரவான வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் 2 நாள்
வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்ப்பை கவனத்தில் கொண்டு இன்றும், நாளையும் பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்று பிரான்சு அறிவித்துள்ளது.
துனீசியாவில் துவங்கிய அரபுலக புரட்சியின் லட்சியங்களை பிலைதின் கொலை பாதிக்காது என்று துனீசியாவின் அதிபர் முன்ஸிஃப் மர்ஸூகி தெரிவித்துள்ளார். ஒ.ஐ.சி உச்சிமாநாட்டில் பங்கேற்க நேற்று எகிப்திற்கு செல்லவிருந்த மர்ஸூகி பயணத்தை ரத்துச்செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment