மும்பை:கொலைச் செய்யப்பட்ட பிரபல மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ஷாஹித் ஆஸ்மியை ஜம்மியத்துல் உலமா கைகழுவி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்காக சிறப்பு மோக்கா நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றத்திலும் ஆஜராகி வாதிட்டவர் ஜம்மியத்துல் உலமாவின் சட்டப்பிரிவின் முதுகெலும்பாக திகழ்ந்த ஷாஹித் ஆஸ்மி.மஹராஷ்ட்ரா அரசின் கறுப்புச் சட்டமான மோக்காவுக்கு எதிரான போராட்டத்தின் இடையில் 2010-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் ஷாஹித் ஆஸ்மி கொலைச் செய்யப்பட்டார்.ஷாஹிதின் கொலையாளிகளுக்கு எதிரான சட்டரீதியான போராட்டத்தில் அவரது உறவினர்களுக்கு ஜம்மியத்துல் உலமா ஆதரவை தெரிவித்திருந்தது.
நிழலுக தாதா பரத் நேப்பாளியின் கும்பலைச் சார்ந்த 4 பேர் இக்கொலை தொடர்பாக கைதுச் செய்யப்பட்டனர்.இவர்களுக்கு எதிரான விசாரணை துவங்கவிருக்கும் வேளையில் ஜம்மியத்துல் உலமா வழக்கை நடத்தும் பொறுப்பில் இருந்து பின்வாங்கிவிட்டதாக ஷாஹிதின் சகோதரரும், வழக்கறிஞருமான காலித் ஆஸ்மி கூறுகிறார்.
ஷாஹிதின் வழக்கை நடத்துவதில் இருந்து ஜம்மியத்துல் உலமா பின்வாங்கியதைத் தொடர்ந்து காலித் ஆஸ்மி, ஜம்மியத்தின் சட்டப்பிரிவில் இருந்து ராஜினாமாச் செய்துவிட்டார்.ஷாஹித், மோக்கா உள்ளிட்ட நீதிமன்றங்களில் வாதிட்ட வழக்குகளில் அவரது மறைவுக்குப் பிறகு வாதாடி வருபவர் காலித் ஆவார்.ஷாஹித் ஆஸ்மியின் கொலையின் பின்னணியில் மும்பை போலீஸின் கரங்கள் இருப்பதாக உறவினர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் சந்தேகிக்கின்றனர்.தேசப்பற்றை வெளிக்காட்டும் நிழலுக தாதா சோட்டா ராஜன் தான் இக்கொலையின் பின்னணியில் இருப்பதாக போலீஸ் கூறுகிறது.பரத் நேபாளி சோட்டா ராஜனின் கும்பலைச் சார்ந்தவன் ஆவான்.ஷாஹித் முஸ்லிம் போராளிகளை பாதுகாக்க முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டி இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது.உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவர உதவுவோம் என்று ஜம்மியத்துல் உலமா வாக்களித்திருந்தது.ஆனால், தற்போது இவ்வழக்கை போலீசும், அரசும்தான் நடத்தவேண்டும் என்று ஜம்மியத்துல் உலமா நழுவுகிறது.போலீஸ் தான் இவ்வழக்கை நடத்தவேண்டும் என்றும், ஜம்மியத்துல் உலமாவுக்கு இதில் தலையிட இயலாது என்றும் அதன் சட்டப்பிரிவு செயலாளர் குல்சார் ஆஸ்மி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment