
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தியது தொடர்பான அறிக்கையின் விபரங்களை வெளியிடக்கோரி மத்திய தகவல் அறியும் உரிமை கமிஷனின் உத்தரவை இந்திய தொல்லியல் துறை புறக்கணித்துள்ளது.
அறிக்கையை வெளியிடக்கோரி தகவல் அறியும் உரிமை ஆர்லவர் சுபாஷ் அகர்வால் சமர்ப்பித்த மனுவை நிராகரித்த தொல்லியல் துறை தொடர்ந்து தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவர் அளித்த உத்தரவையும் நிராகரித்துள்ளது.
அறிக்கையின் விபரங்களோ அல்லது அறிக்கையை வெளியிடக்கூடாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலையோ அகர்வாலுக்கு அளிக்கவேண்டும் என்று தலைமை தகவல் அறியும் உரிமை கமிஷனர் சத்யானந்தா மிஷ்ரா தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், 45 தினங்கள் கழிந்த பிறகும் பதில் கிடைக்காததால் அகர்வால் மீண்டும் தகவல் அறியும் உரிமை கமிஷனரை அணுகியுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின் உத்தரவு கிடைத்து பல தினங்கள் கழிந்த பிறகும் அரசு நிறுவனமான தொல்லியல் துறை கமிஷனின் உத்தரவை கண்டும் காணாமல் இருப்பதாக அகர்வால் தனது புகாரில் கூறியுள்ளார்.
முன்னர் இந்த அறிக்கையை கேட்டு அகர்வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தொல்லியல் துறையை அணுகிய வேளையில், அது நீதிமன்ற தேவைக்கு என்று கூறி வெளியிட இயலாது என்று மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment