பக்கங்கள்

Wednesday, March 28, 2012

துருக்கி:இஸ்ரேல் உறவை துண்டிக்க கோரி மக்கள் போராட்டம்!


துருக்கி - இஸ்ரேல் உறவை துண்டிக்க கோரி மக்கள் போராட்டம்அங்காரா:அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான கொள்கை முடிவை எடுக்காத துருக்கி எர்துகானின் அரசு மீது அந்நாட்டு மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
அங்காராவில் இஸ்ரேல் தூதரகத்தை மூடக்கோரி ஆசிய நாடுகளைச் சார்ந்த எதிர்ப்பாளர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான துருக்கியர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், வெளிநாட்டுக் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை எர்துகானின் அரசு மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்கு முதன் முதலாக தூதரக ரீதியாக அங்கீகாரம் அளித்த முஸ்லிம் நாடு துருக்கி ஆகும். மதசார்பற்ற தேசமாக துருக்கியை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட முன்னாள் ஆட்சியாளர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அமெரிக்காவும் இதர நாடுகளும் இஸ்ரேலுக்கு அந்நாட்டில் அங்கீகாரத்தை பெற்று தந்தன. ஆனால், துருக்கியில் சமீபகால மாற்றங்கள் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன.
ஃபலஸ்தீன் விவகாரத்தில் இதர நாடுகளுடன் இணைந்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள எர்துகான் அரசு தயங்க கூடாது என்று துருக்கியில் குறிப்பிட்ட சதவீத மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்களிடையே உருவாகியுள்ள இஸ்ரேல் எதிர்ப்புணர்வை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அண்மையில் காஸ்ஸாவிற்கு சென்ற நிவாரண கப்பலை தாக்கி அதில் இருந்த எட்டு தன்னார்வ தொண்டர்களை கொலைச்செய்த இஸ்ரேலின் நடவடிக்கை துருக்கியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தது. அமெரிக்காவும் இதர நாடுகளும் செலுத்தி வரும் அழுத்தம் காரணமாகவே எர்துகான் அரசு இஸ்ரேலிடம் மிருதுவான போக்கை கடைப்பிடிப்பதாக துருக்கியின் பிரபல அரசு சாரா அமைப்பான மஸ்லூம்தாரின் தலைவர் ஃபாரூக் உண்ஸால் கூறுகிறார்.
துருக்கி மக்கள் எப்பொழுதும் ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று ஐ.ஹெச்.ஹெச் ஹியுமனிட்டேரியன் ரிலீஃ ஃபவுண்டேசனின் தலைவர் ஹனீஃப் ஸினான் கூறியுள்ளார். இஸ்ரேலிடமிருந்து இனிமேலாவது ஆயுதங்களை துருக்கி வாங்க கூடாது என்று துருக்கியின் சாதாரண மக்களும் விரும்புகின்றனர்.
இதனிடையே இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் இருந்து புறப்பட்ட காரவனுக்கு பெரும் மக்கள் ஆதரவு துருக்கியில் கிடைத்துள்ளது. ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த காரவன் இம்மாதம் 30-ஆம் தேதி லெபனானை அடையும். பின்னர் இஸ்ரேல் எல்லை நோக்கி பேரணி நடைபெறும். காரவன் எல்லையை நோக்கி வருவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று இஸ்ரேலுடன் எல்லையை பங்கிடும் லெபனான் உள்பட நான்கு நாடுகளுக்கு இஸ்ரேலின் சியோனிச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைதியான வழியில் ஃபலஸ்தீன் மக்களுக்கான போராட்டத்தை நடத்திச்செல்வோம் என்று ஆசிய காரவனின் பிரமுக சிற்பிகளில் ஒருவரான ஆல் இந்தியா செக்குலர் ஃபாரம் கன்வீனர் சுரேஷ் கைரனார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment